Monday, August 24, 2009

நினைவுப் பருக்கைகள்

மூடிய கதவின் இடுக்கின் ஊடே
ஊடுருவும் ஒளி போல‌
மறக்க நினைக்கும் உள்ளத்தில்
ஊடுருவி விடுகிறாய்.

சுடு எண்னைப் பட்டு வெடிக்கும் கடுகாய்
உன் சின்னச் சின்ன நினைவுகள்
பெரும் பிரளயத்தையே
உருவாக்குகிறது உள்ளமெங்கும்.

இருட்டு வெளியில்
ஓயாமல் இசைக்கும் இரவுப் பூச்சிக்ளாய்
உறங்கும் உள்ளத்தில் மென்மையாய்ப் பேசி
கனவுகளில் கண்ணாமூச்சி ஆடுகிறாய்.

தூறலாய், பெரும் மழையாய்
மாறி மாறி மன மண்ணில் விழுந்து
இளகச் செய்கிறாய்
பொழுது எதுவென்றும் பாராமல்.

சிறார்களின் சாப்பிட்ட இடமாய்
இறைந்து கிட‌க்கிறது மனமெங்கும்
நினைவுப் பருக்கைகள்.

வேரோடு வெட்டி வீழ்த்தாமல்
தரையோடு வெட்டியதால்
போத்து போத்தாய் வெடிக்கிறது‍
நம் கடந்த காலங்கள்.

No comments:

Post a Comment